மூடவும்

அரசு அருங்காட்சியகம், வேலூா்

வேலூா் அரசு அருங்காட்சியகமானது வரலாற்றுச் சிறப்புமிக்க வேலூா் கோட்டையினுள் அமைந்துள்ளது. இவ்வருங்காட்சியகமானது அன்றைய வடாற்காடு மாவட்ட (தற்போதைய வேலூா் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள்) முக்கியத்துவத்தினை விளக்கும் விதமாக, 6-வது மாவட்ட அரசு அருங்காட்சியகமாக 1985-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. இவ்விரு மாவட்டங்களில், அதிக அளவிலான தாவர, விலங்கின வளங்களையும், புராதான பண்பாட்டுச் சின்னங்களையும் கொண்டுள்ளன.

Government Museum, Vellore

அரசு அருங்காட்சியகம், வேலூா்

பண்டைய காலத்தில், வேலூா் மாவட்டமானது, பல்லவர், சோழர், சம்புவராயர் மற்றும் விஜயநகர மன்னர்களது ஆளுகையின் கீழு் இருந்துள்ளது. சம்புவராயர்கள் மற்றும் விஜயநகர மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் வேலூா் மாவட்டமானது தமிழக வரலாற்றில் முக்கிய இடத்தை வகித்தது. விஜயநகர பேரரசின் இறுதிக் காலக்கட்டத்தில், வேலூா் அவர்களது தலைநகராகவும் திகழ்ந்தது. பின்னர் ஐரோப்பாவில் இருந்து வாணிகம் செய்ய வந்த ஆங்கிலேயர்களும், பிரெஞ்சுக்காரர்களும், ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற துணியும் போது, ஆற்காடு நவாப்கள் இவ்விருவருக்கும் மாறிமாறி ஆதரவளித்தனர். வேலூா் கோட்டையானது இந்த தொடர் தாக்குதலுக்கு சாட்சியானது.

1806ஆம் ஆண்டு வேலூா் கோட்டையினுள் தான் ஆங்கிலேயர்களுக்கு எதிராக சிப்பாய் புரட்சி நடைபெற்றது. இங்குதான் திப்புவின் குடும்ப உறுப்பினர்கள் அடைக்கப்பட்டு இருந்தனர். மேலும் 1815-ஆம் ஆண்டு இலங்கையை (கண்டி) ஆண்ட கடைசி தமிழ் மன்னரான ஸ்ரீவிக்கிரம ராஜ சிங்கன் அவர்களும் இங்கே சிறை வைக்கப்பட்டு இருந்தார்.

இவ்விதமாக, பல்வேறு வரலாற்றுச் சம்பவங்களையும், வேலூா் அரசு அருங்காட்சியகத்தின் கலை, தொல்லியல், மானுடவியல், புவியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் காட்சிப் பெட்டிகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

வேலூா் அருங்காட்சியத்தின் நுழைவு வாயிலில், 16-அடி உயரமுள்ள டைனோசரஸின் கண்ணாடி இழை மாதிரியானது, பார்வையாளா்களை கவரும் விதமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. வேலூா் கோட்டையில் கிடைத்த 18-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த இரு பீரங்கிகள் நுழைவு வாயிலில் உள்ளன. இவ்வருங்காட்சியகத்தில் அமைந்துள்ள கற்சிற்பப் பூங்காவில், மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து கண்டெடுக்கப்பட்ட கற்சிற்பங்களும், வீரக்கற்களும், கல்வெட்டுக்களும், இரு வெடிமருந்து குடுவைகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

மாணவர்கள், பாா்வையாளர்கள் மற்றும் பொதுமக்களை கவரும்விதமாக இவ்வருங்காட்சியகத்தில் எட்டுவிதமான காட்சிக்கூடங்கள் அமைந்துள்ளன.

வேலூா் அரசு அருங்காட்சியத்தின் 8-காட்சிக்கூடங்களாவன

1. மாவட்ட அறிமுகக் கூடம்

இக்காட்சிக் கூடத்தில் நிழற்படங்கள் வேலூா் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் அமைந்துள்ள, புராதான நினைவுச்சின்னங்கள், சுற்றுலாத்தலங்கள், புவியியல் வரைபடங்கள் ஆகியன காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

2.கற்சிற்பங்கள் கூடம்

Stone Sculptures

கற்சிற்பங்கள் கூடம்

இக்கூடத்தில் வரலாற்று சிறப்புவாய்ந்த மன்னர்களான, பல்லவர்கள், சோழர்கள் மற்றும் விஜயநகர மன்னர்களது காலத்திய கற்சிற்பங்கள் பாங்குற காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

3.முந்துவரலாறு மற்றும் அஞ்சல்தலைகள் கூடம்

முந்துவரலாறு என்பது, கற்காலம், செம்புக்காலம் மற்றும் இரும்புக்காலத்துடன் தொடர்புடையது. பழைய கற்கால கற்கருவிகள், கைக்கோடாரிகள், புதிய கற்கால கல் ஆயுதங்கள், முதுமக்கள்தாழி மற்றும் மட்கலன்கள், ஈமப்பேழைகள் இங்கு காட்சியில் உள்ளன.

அஞ்சல்தலைகள் கூடத்தில் பல்வேறு நாட்டு அஞ்சல்தலைகள், தாவர மற்றும் விலங்கின அஞ்சல்தலைகள், புராதானச் சின்னங்களின் அஞ்சல்தலைகள், தேசத்தலைவர்களின் அஞ்சல்தலைகள் அழகுடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

4.கலைக்கூடம்

16-சமகால ஓவியங்கள் இக்கூடத்தில் காட்சியில் உள்ளன. அவற்றில் எண்ணெய் வண்ண ஓவியம், நீர்வண்ண ஓவியம், அக்ரிக் ஓவியம் ஆகியன அடங்கும்.

5.இயற்கை அறிவியல் கூடம்

இக்கூட்டத்தில், ஈரநிலையில் பதப்படுத்தப்பட்ட மற்றும் உலர்நிலையில் பதப்படுத்திய விலங்கினங்கள் இங்கு காட்சியில் உள்ளன. கழுதைப்புலி மற்றும் மான் அது வாழும் சூழ்நிலையில், சூழலியல் காட்சிப்பெட்டியில் காட்சியில் உள்ளது.

நீர்வாழ் பறவை இனங்கள், தனி காட்சிப் பெட்டியிலும், கடல்வாழ் உயிரினங்களான கடற்குதிரைகள், மீன்கள், நண்டுகள், பவளங்கள் தனிக்காட்சிப் பெட்டியிலும், மருத்துவ தாவரங்கள் மற்றும் அதன் பயன்கள் பிறிதொரு காட்சிப்பெட்டியிலும், புவியியல் காட்சிப்பெட்டியில்  பாறைகள், கனிமங்கள் மற்றும் புதைஉயிர் விவரங்கள் ஆகியவை காட்சியில் உள்ளன.

6.படிமக் கூடம்

கலையியல் ரீதியாக, தென்னிந்திய படிமங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்த கூடத்தில், இந்திய புதைபொருள் சட்டத்தின்படி, பூமிக்கு அடியில் புதைபொருளாக, வேலூா் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தின் படிமங்கள் காட்சியில் உள்ளது. இவற்றுள் அரும்பலூா் சமணப்படிமங்கள் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இலங்கை (கண்டி)யை ஆண்ட கடைசி தமிழ் மன்னரான ஸ்ரீவிக்கிரம ராஜ சிங்கன் பயன்படுத்திய அரும்பொருட்கள் மிகவும் சிறப்புவாய்ந்த ஒன்று.

7. நாணயவியல் கூடம்

நாணயங்கள் வரலாற்றுக்கு மிக முக்கியமான சான்றாவணம் ஆகும். இக்கூடத்தில் வட இந்திய மற்றும் தென்னிந்திய நாணயங்கள் காட்சியில் உள்ளன.

8. மானுடவியல் கூடம்

Anthropology Gallery

மானுடவியல் கூடம்

இக்கூடத்தில், ஆரணி ஜாகீர்தார்கரின் போர்வாட்கள், காட்டுநாயக்கன் மலையாளி, இருளர் பழங்குடியினரின் பொருட்களும், இலவம்பாடி மக்களது, ஆடை அணிகலன்களும், கரிகிரியில் செய்யப்பட்ட மெருகூட்டிய மட்பாண்ட பொருட்களும், பல் தரப்பு மக்களது வாழ்வியல் முறைகளை அழிந்து கொள்ள சிறந்த சான்று ஆகும்.