மூடவும்

வரலாறு

வேலூர் மாவட்டத்தின் வரலாற்று முக்கியத்துவம்

வேலூா் மாவட்டத்தின் தலைமையிடமான வேலூரானது 12′ 35′ வடக்காகவும் மற்றும் 79′ 9′ கிழக்காகவும் அமைந்து, தனக்கென தனி வரலாற்று சிறப்பினைக் கொண்டது. வேலூர் மாவட்டத்தின் தலைமையிடமான வேலூரானது அருகிலுள்ள ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் உள்ள பெருநகரங்களை இரயில் மற்றும் பேருந்து வழித்தடங்கள் மூலமாக நன்றாக இணைக்கப்பட்டுள்ளது. நாம் பெருமை மிக்க கடந்த காலத்தை ஆராயும் போது வேலூா் மாவட்டத்தின் சிறப்பான முக்கியத்துவமும், தொடர்பும் நன்கு விளங்கும். மேலும் வேலூா் மாவட்டமானது பல்லவர்கள், சோழர்கள், ராஷ்டிரகூடர்கள், விஜயநகரப் பேரரசர், சம்புவராயர், நாயக்கர்கள், மராட்டியர்கள், ஆற்காடு நவாப்கள், கர்நாடக மற்றும் ஆங்கிலேய நவாப்கள் பிஜப்பூர் சுல்தான் போன்ற பல்வேறு அரசப் பரம்பரைகளால் ஆட்சி செய்யப் பெற்ற பெருமை மிக்க பாரம்பரியம் கொண்டது. 17 ஆம் நூற்றாண்டில் நடந்த கர்நாடக போரில் இதன் சிறப்பம்சம் மற்றும் கோட்டையின் வலிமையும் நன்றாக விளக்கப்பட்டுள்ளது. கி.பி.1806ல் வேலூரில் நடந்த சிப்பாய் கலகம் ஒரு ஐரோப்பிய சிப்பாய்  படுகொலையை சாட்சியாக கொண்டுள்ளது. இம்மாவட்டத்தில் கிடைக்கப் பெற்ற நினைவுச்சின்னங்கள் கடந்த காலத்தின் வரலாற்றை தெளிவாக எடுத்துரைக்கின்றன. 18ஆம் நூற்றாண்டில் குறிப்பாக கி.பி.1749ல் நடைபெற்ற ஆம்பூர் போர், கி.பி.1751ல் நடைபெற்ற ஆற்காடு போர், கி.பி.1768-ல் நடைபெற்ற வந்தவாசிப்போர் போன்றவை ஆங்கிலேயர் மற்றும் பிரஞ்சு போன்ற மேலாதிக்கத்திற்காக நடந்த நீண்ட வெற்றிகரமான போர்களில் வேலூா் மாவட்டம் ஒரு மிகச்சிறந்த சாட்சியாக விளங்குகிறது.

வேலூர் கோட்டையானது வேலூரின் நினைவுச்சின்னங்களில் ஒன்று. இக்கோட்டையானது எந்நாளில் கட்டப்பட்டது என்ற சரியான விவரம் கிடைக்கப் பெறவில்லை. இக்கோட்டையிலுள்ள கல்வெட்டுக்களை நுணுக்கமான முறையில் ஆராயும் போது, இக்கோட்டையானது கி.பி.1526 முதல் கி.பி.1595 வரையிலான காலத்தில் சின்ன பொம்மி நாயக்கர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது என அறியவருகிறது. வேலூர் கோட்டையானது தென்னிந்தியாவின் இராணுவ கட்டடக் கலையின் ஒரு மிகச்சிறந்த உதாரணமாக உள்ளது.

கோட்டையின் உள்ளே உள்ள ஜலகண்டேஸ்வரர் கோயில் விஜயநகரப் பேரரசின் கட்டடக் கலையின் மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது. கோட்டையின் நுழைவு வாயிலின் உள்ளே இடது பக்கத்தில் உள்ள நுணுக்கமான கலைச்சிற்பங்களுடன் கூடிய கல்யாண மண்டபமானது காலத்தை கடந்து நிற்கும் பொறியியல் மற்றும் கட்டடக் கலைக்கு மிகச்சிறந்த சான்றாக விளங்குகின்றது. மேலும், வேலூா் நகரின் மற்றொரு அடையாளமாகவும், மருத்துவ உலகின் மையமாகவும் கிருத்துவ மருத்துவக் கலலூரி மற்றும் மருத்துவமனை அமைந்துள்ளது. டாக்டர்.ஐடா ஸ்கடர் என்ற மிஷினரியான அமெரிக்கப் பெண்மனி தன்னுடைய மருத்துவ சேவை புரிவதற்காக கி.பி.1900-ல் ஒரு சிறிய மருத்தவமனையை அமைத்து, அது பின்னாளில் நூறு ஆண்டுகளை கடந்து, முதன்மையான மருத்துவ நிறுவனமாக சர்வதேச அளவில் புகழ் பெற்றுள்ளது. மற்றொரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாக கி.பி.1830ல் வேலூா் மத்திய சிறையானது நிறுவப்பட்டது. இச்சிறையில் சிறந்த முக்கியத்தலைவர்கள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களான திரு.இராஜாஜி, திரு.சி.என்.அண்ணாதுரை, திரு.கே.காமராஜ் மற்றும் முன்னாள் குடியரசுத் தலைவர்களாக திரு.வி.வி.கிரி, திரு.ஆர்.வெங்கட்ராமன் ஆகியோர் தங்களது சிறைக்காலத்தை கழித்தனர். வேலூர் – ஆற்காடு சாலையில் அருகந்தம்பூண்டியில் திப்புசுல்தானின் குடும்ப உறுப்பினர்கள் புதைக்கப்பட்ட கல்லறை மற்றும் கி.பி.1798 முதல் கி.பி.1815 வரை இலங்கையின் கண்டி நகரை ஆண்ட கடைசி தமிழ் மன்னர் விக்ரமக ராஜசிங்கா அரசரை கௌரவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசால் எழுப்பப்பட்ட பாலாறு ஆற்றங்கரையில் அமைந்தள்ள முத்துமண்டம் ஆகிய குறிப்பிடத்தகுந்த நினைவுச்சின்னங்கள் ஆகும். இவர் வேலூர் கோட்டையில் 17 வருடங்கள் சிறை வைக்கப்பட்டார்.

சுதந்திரப் போராட்டத்தில் வேலூா் மாவட்டத்தின் பங்கு

சுதந்திர போரட்டத்தில் வேலூர் மாவட்டம் எப்போதும் முன்னனியில் இருந்துள்ளது. கி.பி.1806ல் வேலூர் கோட்டையிலிருந்து வெடித்து கிளம்பிய சிப்பாய் கலகமானது, ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராக கி.பி.1857ல் நடைபெற்ற முதல் சுதந்திர போராட்டத்திற்கு முன்னோடியாக இருந்தது.

இராணுவப் பணிக்கு தங்களை அதிக அளவில் ஈடுபடுத்திக் கொண்டு, வீரதீரத்துடன் ஆத்மார்ந்த சேவை செய்வர்களை அதிகமாகக் கொண்டு, தேசத்தில் மற்ற மாவட்டங்களை மிஞ்சும் வகையில் உள்ளது, வேலூரின் மற்றொரு பாராட்டத் தகுந்த மற்றுமொரு மிகச்சிறந்த அம்சமாகும். வேலூரிலுள்ள லாங்கு பஜாரில் வீற்றிருக்கும் மணிக்கூண்டானது கி.பி.1928ல் நிறுவப்பட்டது. இந்த மணிக்கூண்டு உள்ள கட்டடத்தில் உள்ள கல்வெட்டில் ” இந்த ஊரிலிருந்து 1914-18ஆம் ஆண்ட நடந்த முதலாம் உலகப் போரில் 277 ஆண்கள் பங்கேற்று, அவர்களில் 14 பேர் தங்கள் இன்னுயிரை நீத்தனர்” என்ற வரிகள் ஆங்கிலத்தில் வடிக்கப்பட்டுள்ளன. இக்கல்வெட்டானது வேலூர் மக்களின் வீரத்திற்கு பதியப்பட்ட சான்றாக உள்ளது.

வேலூரில் 20ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட பொருளாதார, சமூகப் பண்பாட்டு மாற்றங்கள்

வேலூர் மாவட்டத்தில் ஆரம்ப காலத்தில் பெரிய தொழில் நிறுவனங்கள் ஏதும் இல்லாததால், பொருளாதார நிலைமை தாழ்வாக இருந்தது. அரசின் கடும் முயற்சிக்குப் பின்னர், இராணிப்பேட்டை பெல் (BHEL) நிறுவனம் மற்றும் தமிழ்நாடு வெடிமருந்து தொழிற்சாலை ஆகியவை வேலூரின் பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவிகரமாக இருந்தன. இம்மாவட்டத்தில் வளர்ச்சிக்கு சிறுதொழில் நிறுவனங்கள் மற்றும் தோல் தொழிற்சாலைகள் ஆதாரமாக இருந்தன. இத்தொழில் நிறுவனங்கள் வேலைவாய்ப்பு மட்டுமின்றி தொழில் வளர்ச்சிக்கும் பங்காற்றின. உழவர்களின் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கின்றன. புதுமையான சுயஉதவிக் குழுக்கள் கிராமப்புற பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றுவதுடன், கிராமப்புற பெண்களின் சுயசார்புக்கும் உறுதுணையாக இருக்கின்றது.

காலமாற்றத்திற்கு ஏற்ப, சமூக காட்சிகளும் மாறுகின்றன. சமூக விழிப்புணர்வு மற்றும் ஏறுமுக சமூக வளர்ச்சி ஆகியவற்றில் ஏற்பட்ட முன்னேற்றம் வேலூா் மாவட்டம் அடைந்த வெற்றிக்குச் சான்றாகும். புதிய சமூக அமைப்பில் கொத்தடிமை மற்றும் குழந்தை தொழிலாளர் ஆகியவை வேகமாக மறைந்து வருகின்றது. சமூக மாற்றத்திற்காக அறிவொளி இயக்கத்தின் மூலமாக நுறு சதவீத கல்வியறிவு பெற உரிய முயற்சிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

வேலூர் மாவட்டத்தில் பல்வேறு வகுப்பினைச் சார்ந்தவர்களை சமூக ஒற்றுமை மற்றும் அமைதிக்காகவும் சமுத்துவபுரங்கள் ஏற்படுத்தப்பட்டு, ஒரு புதிய சகாப்தத்தை தோற்றுவித்துள்ளது. வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தரவும், இலவச மருத்துவ முகாம்களும் நடத்தப்படுவது தமிழ்நாட்டின் சமூக வரலாற்றில் ஒரு மைல் கல்லாகும்.

வேலூர் மாவட்டத்தில் கல்லூரிக் கல்வியின் வளர்ச்சி

தழிழ்நாட்டில் முதன்மை மாவட்டங்களில் ஒன்றாக வேலூா் மாவட்டம் உள்ளது பாராட்டத் தகுந்த ஒன்றாகும். தி அமெரிக்கன் மிஷன் என்ற கல்வி நிறுவனமானது வேலூரில் உயர் கல்விக்காக கி.பி.1853-ல் நிறுவப்பட்டு, கி.பி.1898ல் சென்னை பல்கலைகழகத்துடன் இணைக்கப்பட்டது. பின்னர் இந்நிறுவனமானது ஊரிசு கல்லூரி என்று மாற்றப்பட்டது. மேலும் திருப்பத்தூரிலுள்ள தூய நெஞ்சக் கல்லூரி, காட்பாடியிலுள்ள ஆக்ஸீலியம் மகளிர் கல்லூரி மற்றும் இதர கிருத்துவ நிறுவனங்கள் கல்விக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டன. தமிழக அரசு உயர்கல்வி வளர்ச்சிக்காக கலைக் கல்லுரிகளை மாநிலம் முழுவதும் ஏற்படுத்தியது. வேலூா் மாவட்டத்தில் முத்துரங்கம் அரசு கல்லூரி,வேலூர், திருமகள் ஆலை அரசுக் கல்லூரி குடியாத்தம், அறிஞர் அண்ணா பெண்கள் கலைக்கல்லூரி வாலாஜா, ஆகியவை கிராமப்புற ஏழை மாணவ, மாணவிகளுக்காக ஏற்படுத்தப்பட்டன. உயர்கல்வி வளர்ச்சியில் தனியார் கல்வி நிறுவனங்களின் பங்களிப்பிற்கு வேலூரிலுள்ள டி.கே.எம் மகளிர் கல்லூரி ஒரு நல்ல எடுத்துக்காட்டாக உள்ளது.

சில இஸ்லாமிய கொடையாளர்களும், கல்வியாளர்களும் உயர்கல்வியின் அவசியத்தை உணர்ந்து, இஸ்லாமிய இளம் மாணவர்களின் உயர்கல்விக்காக கல்வி நிறுவனங்களை நிர்மானித்தனா். இஸ்லாமியக் கல்லூரி வாணியம்பாடி, C.அப்துல் ஹகீம் கல்லூரி மேல்விஷாரம், மஸ்ருல் உலூம் கல்லூரி ஆம்பூர் மற்றும் இஸ்லாம் சிறுபாண்மையினர் கல்வி நிறுவனங்கள் ஆகியவை உயர்கல்விக்காக வேலூா் மாவட்டத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. வேலூர் நகரில் உள்ள அரேபியக் கல்லூரியானது மற்றொரு முக்கியமான உயர்கல்வி நிறுவனமாகும்.

மேலும் வேலூர் மாவட்டமானது தொழில் கல்வியிலும் பின்தங்கியிருக்கவில்லை. சர்வதேச அளவில் புகழ் பெற்ற கிருத்துவ மருத்துவக் கல்லூரியானது பல சிறப்பு பிரிகளிலும் முதுநிலை கல்வியை வழங்குகிறது. பொறியியல் கல்லூரியை துவக்கியதன் மூலம், மாணவ சமுதாயத்தின் பொறியியல் கனவையும் பூர்த்தி செய்கிறது. கடந்த சில ஆண்டுகளாக சுயநிதிக் கல்லூரிகளையும் ஊக்குவிக்கிறது. மேலம் வேலூர் அரசு ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் இளநிலை/முதுநிலை வகுப்புகளை நடத்துகின்றது. இந்த கல்வி நிறுவனங்களின் வளர்ச்சியானது மாணவ சமுதாயத்தின் வளர்ச்சித் தேவையினை ஆராய்தல் மட்டுமின்றி, உயர் மற்றும் தொழில் கல்வியிலும் ஆழ்ந்த ஆர்வம் கொண்டுள்ளதாகவும் உள்ளன.